கூட்டமைப்புக்குள் ஒற்றுமை அவசியம் – அறிவுரை கூறிய இந்திய வெளிவிவகாரச் செயலர்
தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக்காலை இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதன்போதே, புதிய அரசியலமைப்பின் கீழ் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய வெளிவிவகாரச் செயலருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.
அரசியலமைப்பு மாற்றத்துக்கான உப குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் கையளிக்கப்பட்டு விட்ட நிலையில், வழிநடத்தல் குழுவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி திடீரென குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்தும், இதன் போது கூட்டமைப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஏனைய வாக்குறுதிகளையும் காப்பாற்றத் தவறியிருப்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகாரச் செயலர், எஸ்.ஜெய்சங்கர், இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர்களுடன் பேசும் போது எடுத்துக் கூறுகிறேன்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேறும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று குறிப்பிட்டார்.