பாகிஸ்தான் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் குறித்து பாடம் நடத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி
பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன.
பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடந்த புதன்கிழமை (பெப்ரவரி 15 ஆம் நாள்) லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லுரிக்குச் சென்றிருந்தார்.
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இந்த லாகூர் கடற்படை போர்க் கல்லூரியில் அதிகாரிகளுக்கான கற்கைநெறியை பயின்று வருகின்றனர்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 1995ஆம் ஆண்டில், இந்த போர்க் கல்லூரியில் பயிற்சிகளை பெற்றிருந்தார்.
இங்கு சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி, பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் மத்தியில், ‘ மரபுசாரா எதியுடனான சிறிலங்கா கடற்படையின் போர் அனுபவங்கள்’ என்ற பொருளில் உரையாற்றினார்.
மரபுசார எதிரியுடன் சிறிலங்கா கடற்படை எவ்வாறு போரிட்டது, இந்த அச்சுறுத்தலை ஒரு மரபுசாரா கடற்படை எவ்வாறு எதிர்கொண்டது, மூன்று பத்தாண்டுளாக நீடித்த போரில் வெற்றியீட்டியது எப்படி என்று அவர் தனது உரையில் விரிவாக விளக்கிக் கூறினார்.
இதனை விரிவாக விளக்கும் வகையில், கடற்புலிகளின் பரிமாள வளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதல் அச்சுறுத்தல், சிறிலங்கா கடற்படையின் பதில் நடவடிக்கை, தற்கொலை தாக்குதல்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள், சிறிய படகுகள் கருத்திட்டம் குறித்த ஆய்வும், அபிவிருத்தியும், விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து சிறிலங்கா கடற்படைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.