இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் கப்டன் அசோக் ராவ்
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கப்டன் அசோக் ராவ், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றதையடுத்து, சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, பாகிஸ்தானுக்குப் புறப்படுவதற்கு முன்னர், இந்திய தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ், அவரைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கப்டன் அசோக் ராவ் விரைவில் வடக்கிற்கான பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.