கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க பாகிஸ்தானுக்குச் செல்கிறது சிறிலங்கா போர்க்கப்பல்
வடக்கு அரபிக் கடலில் 21 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், அமான் பயிற்சி-17 என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா கடற்படையின், எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ள எஸ்எல்என்எஸ் சமுத்ர, வரும் 9ஆம் நாள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.
இதில், 186 சிறிலங்கா கடற்படையினரும், மாலைதீவு தேசிய காவல்படையைச் சேர்ந்த 8 பேரும், பயணம் செய்கின்றனர்.
வடக்கு அரபிக் கடலில் கராச்சி அருகே, வரும், 10ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை நடைபெறவுள்ள, “அமான் பயிற்சி-17” கூட்டுப் பயிற்சியில், எஸ்எல்என்எஸ் சமுத்ர பங்கேற்கவுள்ளது.
கடற்படைகளின் அனுபவங்களை பரிமாறிக் கொள்வது மற்றும் பிராந்திய பாதுகாப்பை முன்னேற்றுவதை நோக்காக கொண்டு இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது.