சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம், இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த புதிய பணியகத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹரஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வெளிவிவகார, பாதுகாப்புச் செயலர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் சேவைகளை வடபகுதியில் உள்ள மக்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தப் பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பணியகம் ஒன்றை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, உள்நாட்டில் முதல்முறையாக அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.