மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள
மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மலேசியா சென்றுள்ள அவர், கோலாலம்பூரில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்திய வம்சாவளித் தமிழர்களே சிறிலங்காவுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை தெரிந்து கொள்ளாமல் தான் அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
சிறிலங்காவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவுக்கு வந்து அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்க வேண்டும்.
போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ளமைக்காக புலம்பெயர் தமிழர்களை குற்றம்சாட்டவில்லை. கடும்போக்காளர்களின் குழுவொன்றோ இதனைச் செய்கிறது.
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், அபிவிருத்தி முயற்சிகளுக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அவசியமானது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சீர்குலைக்கின்ற சிறிலங்காவிலும் பல கடும்போக்குவாத குழுக்கள் உள்ளன.
தமிழ், சிங்கள, முஸ்லிம் கடும்போக்குவாதக் குழுக்கள், நாட்டில் செயற்பட்டாலும், தற்போதைய அரசாங்கத்தில் இனவாதத்துக்கு இடமில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள சிறிலங்கா அதிபருக்கு எதிராக மலேசிய தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.
மலேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 2.10 மணயிளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, அந்த நாட்டின் மனித வள அபிவிருத்தி அமைச்சர் டதோ சிறி றிச்சர்ட் ரியொட் அனக்ஜெம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இன்று மலேசியப் பிரதமரைச் சந்திக்கவுள்ள சிறிலங்கா அதிபர், நாளை அங்கிருந்து சிறிலங்கா திரும்பத் திட்டமிட்டுள்ளார்.