வர்தா புயல் அச்சத்தில் திருகோணமலை – கல்முனையில் ஊருக்குள் புகுந்தது கடல்
வங்கக். கடலில் உருவாகிய வர்தா புயல், நாளை சென்னை அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு கரையோரங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் நேற்றிரவு திருகோணமலையில் இருந்து 800 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது சென்னை வடக்கே நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல், சிறிலங்காவை நேரடியாகத் தாக்காது என்றும், எனினும், இதன் தாக்கத்தினால் கடும் மழை மற்றும் சூறைக் காற்று வீசும் ஆபத்து இருப்பதாக வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.
வடக்கு, கிழக்கு கடற்பரப்பு கடுமையான கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
படங்கள் – எஸ்.எஸ்.குமார்
அதேவேளை, திருகோணமலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலை எதிர்பார்த்து திருகோணமலை மீனவர்கள் தமது படகுகளை வீடுகள், வீதிகளுக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை, திருக்கோவில் பகுதிகளில், இன்று அதிகாலையில் கடல்நீர் பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்துள்ளது.
கரையில் இருந்து 300 மீற்றர் வரை கடல் நீர் உட்புகுந்ததால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.