மேலும்

இணையத்தள ஆசிரியரை கைது செய்ய சிறிலங்கா நீதிமன்றம் அனைத்துலகப் பிடியாணை

gavelநீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் டொன் பிரதீப் சந்துருவன் சேனாதீரவைக் கைது செய்ய கம்பகா பிரதம நீதிவான் அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

ரிவிர நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று கம்பகா நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் படத்தை, அடையாள அணிவகுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக இணையத்தளத்தில் பிரசுரித்து, நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேனாதீரவின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்தே, அனைத்துலக பிடியாணையை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

இந்த பிடியாணை உத்தரவை அனைத்துலக காவல்துறை மூலம் நிறைவேற்றவும் நீதிவான் உத்தரவிட்டதுடன், சேனாதீர சிறிலங்கா வந்தால் விமான நிலையத்தில் கைது செய்யுமாறும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கும் பணிப்புரை விடுத்தார்.

தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ள சந்துருவன் சேனாதீரவை அனைத்துலக காவல்துறை மூலம் கைது செய்து சிறிலங்காவுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *