மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
அண்மையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி, இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, கடந்த 16ஆம் நாள், கரந்தெனியவில் உள்ள இராணுவப் புலனாய்வுப்படைப்பிரிவு தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அவர் தனது பதவியேற்றுக் கொண்ட பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளைத் தனியாகவும், புலனாய்வுப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினரைத் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இதன்போது, இராணுவப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.