“நீங்கள் இப்போது சிறுபான்மையினர்” – மணலாறு சிங்களக் குடியேற்றவாசிகளை உசுப்பேற்றிய மகிந்த
சிங்களவர்களைச் சிறுபான்மையினராக்குவதற்கு, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மணலாறில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ள மயிலங்குளத்தில், அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
வடக்கிலுள்ள சிங்கள மக்களாகிய நீங்கள், இப்போது சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை,
வடக்கு, கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி தமிழர்களின் இராச்சியமாக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
சிறிலங்கா சிறிய நாடு, அதில் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.
அவ்வாறு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா , அமெரிக்கா போன்று இந்த நாடு பெரியது இல்லை.
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதற்கு கூட்டு எதிரணி இடமளிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.