போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – சிறிலங்கா
போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
”இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
முன்னர், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
ஆனால், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இப்போது வெறுமனே 15 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
முன்னதாக, சிறிலங்கா பொருளாதாரத் தடையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்போது, நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு சொந்த திட்டங்களின் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு அனைத்துலக சமூகம் கால அவகாசம் அளித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.