இனிமேல் இப்படி நடக்கக் கூடாது – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் சீனத் தூதுவர் வலியுறுத்தல்
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா அதிபரும், பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த போது இந்த விடயத்தை தாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக சீனத் தூதுவர் கூறியுள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன- சிறிலங்கா வர்த்தக கூட்டத்தில், உரையாற்றிய போதே, சீனத் தூதுவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் இரண்டு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இது போல மீண்டும் இடம்பெறக் கூடாது.
சட்டரீதியான உடன்பாடுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பொருளாதார உடன்பாடுகள் குறித்த கொள்கைகளில் மாற்றம் ஏற்படக் கூடாது” என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.