புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வெள்ளை மாளிகைக்கான ட்ரம்பின் பாதை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுடனும் உங்களின் குழுவுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.