ஆவா குழு சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களே நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதால், விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, மூவரையும் வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் சில்லாலையைச் சேர்ந்த- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரமுகர் அலெக்ஸ் அரவிந்தனும் உள்ளடங்கியுள்ளார்.
எனினும், ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஏனைய மூவர் இன்னமும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.