சீனத் தூதுவரின் கருத்தை நியாயப்படுத்துகிறது சீன வெளிவிவகார அமைச்சு
சிறிலங்கா தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை சீன வெளிவிவகார அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக, சில தவறான புரிதல்கள் மற்றும் தவறான வழிநடத்தல்களுக்கு மாத்திரமே சீனத் தூதுவர் விளக்கம் அளித்துள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.
பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அளித்துள்ள செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங்,
“ஊடகங்களில் உள்ள நண்பர்களிடமே சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் சீன- சிறிலங்கா உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
சீன-சிறிலங்கா ஒத்துழைப்புகள் தொடர்பான தவறான வழிநடத்தல்களால் ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்களுக்கு அவர் கருத்தரங்கில் விளக்கமளித்துள்ளார்.
சீனா – சிறிலங்கா இடையிலான ஒத்துழைப்புகள் பற்றிய நேர்மையான கருத்துப் பரிமாற்றங்கள், பரஸ்பரம் இருதரப்புக்கும் நன்மையளிக்கும் என்பதுடன், நண்பர்களான இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை கொள்வதற்கும் உதவும்” என்றும் தெரிவித்துள்ளார்.