இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ள, உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இந்தியாவுக்குப் பயணமாகியிருந்தார்.
நேற்று மாலை புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த அவரை, இந்திய வெளிவிவகார அமைச்சின் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இணைச்செயலர் ரேணு பால் வரவேற்றார்.
இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இன்று உலக சுகாதார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகையிலை ஒழிப்பு மாநாட்டில், ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அதிபர் இன்று பிற்பகல், கொழும்பு திரும்பவுள்ளார்.