மேலும்

நாளை மறுநாள் கொழும்பு வரும் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

baroness-anelayஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல் முறையாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், வரும் 9 ஆம் நாள் வரை அங்கு அங்கு தங்கியிருப்பார் என்றும், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஊழலுக்கு எதிராகவும் சிறிலங்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பிரித்தானியாவின் ஆதரவை அமைச்சர் பரோனஸ் அனெலி வெளிப்படுத்துவார்.

இந்த விடயங்கள் தொடர்பாக,  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் அவர் கலந்துரையாடுவார்.

யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், வடமாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

அத்துடன், ஹலோ ட்ரஸ்ட் அமைப்பினால் வெடிபொருள் அகற்றப்பட்ட பகுதிகளில் அண்மையில் மீளக்குடியேறிய மக்களையும் அவர் சந்திப்பார்.

கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் பரோனஸ் அனெலி பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *