சம்பந்தனைச் சந்தித்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்றுமாலை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டது.
இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
“அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கினால், அது தேசிய இனப்பிரச்சனைக்கு அது ஓர் தீர்வாக அமையும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது.
அந்தச் செயற்றிட்டத்தில், நாங்கள் பொறுப்பாக ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தி சிறிலங்காவின் அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சர், , நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். கேட்டு அறிந்து கொண்டார்.
சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கவிருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.