இந்திய உதவியுடன் நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்காவில் ஆரம்பம்
இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும், நோயாளர் காவு வண்டிச் சேவையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.
காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் போது, இந்தியப் பிரதமரின் செய்தியும் வாசிக்கப்பட்டது.
நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக இந்த இலவச நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு, 7.6 மில்லியன் டொலரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.
‘திட்டம் 1990’ என்று பெயரிடப்பட்டுள்ள சேவைக்காக 100 இந்த நோயாளர் காவு வண்டிகள் பயன்படுத்தப்பட்டவுள்ளன.
முதற்கட்டமாக, காலி, மாத்தறை, கொழும்பு, களுத்துறை, கம்பகா ஆகிய மாவட்டங்களில் இந்தச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நோயாளர் காவு வண்டிகள் தென்மாகாணத்திலேயே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம், 550 பேருக்கு வேலை வாய்ப்பு அளி்க்கப்படவுள்ளது. ‘திட்டம் 1990’ நோயாளர் காவுவண்டிச் சேவையை மேற்கொள்வதற்காக 250 பேருக்கு ஹைதராபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 250 பணியாளர்களும், 50 அழைப்பு நிலைய பணியாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த சேவைக்கான கட்டுப்பாட்டு மையம் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ளது,