ஜேர்மனியின் மியூனிச் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – 10 பேர் பலி
ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒலிம்பியா வணிக வளாகத்தினுள் நேற்றுமாலை நுழைந்த ஆயுததாரி சரமாரியாகச் சுட்டித் தள்ளி விட்டுத் தப்பிச் சென்றார். இதில் 10 பேர் பலியானதாகவும் 10 பேர் காயமடைந்தாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜேர்மனிய காவல்துறையில் நடத்திய தேடுதலின் போது, தாக்குதலாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமானார்.
முன்னதாக மூன்று தாக்குதலாளிகளை ஜேர்மனி காவல்துறை தேடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து மியூனிச் நகரில், உள்ள மக்களை வெளியே வரவேண்டாம் என்று காவல்துறையினர் கோரியுள்ளதுடன், நகரம் முற்றுமுழுதாக பிற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது போக்குவரத்துகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.