சிறிலங்கா கடற்படை அதிகாரியின் பதவியிறக்கத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு, பதவியிறக்கம் செய்யப்பட்ட, கடற்படைப் புலனாய்வு அதிகாரியான லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுக்கான தண்டனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தாமல் வெளிநாடு சென்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட லெப்.கொமாண்டர் கு.சி.வெலகெதரவுக்கு எதிராக விசாரணை நடத்த இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
அதில் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில், லெப்.கொமாண்டர் வெலகெதர நான்கு ஆண்டுகள் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அவர், ஆயுதப்படைகளின் பிரதம தளபதியான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் அவர், இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்தே, அவரது பதவியிறக்கம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி இந்த தகவலை வெளியிட்டார்.
இதேகுற்றச்சாட்டு லெப். யோசித ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து கடற்படைப் பேச்சாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்,லெப்.கொமாண்டர் வெலகெதர, மிக மூத்த அதிகாரி. லெப். யோசித ராஜபக்ச, இளநிலை அதிகாரி. எனவே இவர்கள் இருவருக்குமான தண்டனைகள் சமமானதல்ல.
எனினும், கடற்படையில் பணியாற்றிய போது, யோசித ராஜபக்ச 74 தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். இதில், 24 சந்தர்ப்பங்களில், முறையான அனுமதி பெறப்படவில்லை.
யோசித ராஜபக்சவுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும், நிதிக்குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா கடற்படையின் விசாரணைகள் ஆரம்பமாகும்,” என்று தெரிவித்தார்.