புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்பேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இன்னமும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் ஈழக்கனவை முற்றாக அழிக்கப் போவதாக, சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
2000ஆம் ஆண்டு நடந்த குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.குணரத்னவின் நினைவு நிகழ்வு தெகிவளையில் நேற்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் நிலையான அமைதியை உறுதிப்படுத்துவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இன்னமும் எஞ்சியிருக்கும், விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோட்பாட்டை தோற்கடிப்போம்.
நான் அதிபராகத் தெரிவான பின்னர், அனைத்து உலகத் தலைவர்களினதும், நட்புறவைப் பெற்றிருக்கிறேன். நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அவர்கள் உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
எல்லோரும் சமத்துவமாகவும் அமைதியாகவும் வாழுகின்ற நிலையை ஏற்படுத்துவேன்.
நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, துப்பாக்கிகளை அமைதியாக்கியுள்ளோம். ஆனால், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோட்பாட்டைத் தோற்கடிக்க முடியவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.