எல்லோருடைய நன்மைக்காகவும் தான் கிழக்கு முதல்வருக்குத் தடை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பங்கேற்கும் நிகழ்வுகளில், முப்படையினரும் பங்கேற்பதை தவிர்க்குமாறு, முடிவு எடுக்கப்பட்டது, எல்லோருடைய நன்மைக்காகவுமே என்று தெரிவித்துள்ளார், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
கடற்படை அதிகாரியை அவமதித்த, கிழக்கு முதல்வரை முப்படைகளின் முகாம்களுக்குள்ளேயும், அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினரும் பங்கேற்பதில்லை என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
இதுகுறித்து, பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து, வேறு சில சம்பவங்கள் நடைபெற்றால், அது நாட்டுக்கு நல்லதாக இருக்காது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுடனும், பாதுகாப்பு அமைச்சு கலந்துரையாடியுள்ளது.
கடற்படை அதிகாரி ஒருவர், கிழக்கு மாகாண முதலமைச்சரால் அவமதிக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்கா கடற்படை வழங்கிய அறிக்கை, சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனைக்காக காத்திருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.