சிறிலங்காவுக்கு 1.5 மில்லியன் டொலர் வழங்குகிறது சீனா – தாமதமாக வரும் உதவி
சிறிலங்காவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, 1.5 மில்லியன் டொலரை சீனா வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சீன வர்த்தக அமைச்சு, நிலைமைகளின் முன்னேற்றங்களைப் பொறுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், கொழும்புக்கு மேலதிக உதவிகளை சீனா வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதேவேளை சீனப் பிரதமரும், சிறிலங்கா பிரதமருக்கு இரங்கல் செய்தியை அனுப்பியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, சிறிலங்கா அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை அனைத்துலக சமூகத்திடம் அவசர கோரிக்கையை விடுத்திருந்தது.
எனினும், சீனா ஒன்பது நாட்களின் பின்னரே, 1.5 மில்லியன் டொலரை உதவியாக வழங்கவுள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் விமானம் ஒன்று இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.