உதவிகளை வழங்குவது குறித்து ஆராய அமெரிக்க உயர் அதிகாரி கொழும்பு வருகை
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று, சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்த, ஹரி சாஸ்திரி, அரசியலமைப்பு சபையின் நிலை தொடர்பாக கலந்துரையாடினர்.
அதேவேளை, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க மற்றும் தயா கமகே ஆகியோரைச் சந்தித்து, சிறிலங்காவுக்கான உதவிகள் மற்றும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தினார்.
அமைச்சர் மனோ கணேசனுடனான சந்திப்பில், நல்லிணக்க முயற்சிகளின் தற்போதைய நிலை தொடர்பாக, கேட்டறிந்த, ஹரி சாஸ்திரி, சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து, தற்போதைய அரசியல் மற்றும் பிற சூழ்நிலைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.
சிறிலங்காவுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராயவே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.