வடக்கில் புலிகளை நினைவுகூர இடமளியோம் – ருவான் விஜேவர்த்தன
வடக்கில் போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது என்றும், அதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துத் தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,
விடுதலைப்புலிகள் இயக்கம் அனைத்துலக மட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. அவர்களை சிறிலங்காவில் அழித்துள்ளோம்.
இந்தநிலையில், புலிகளை நினைவுகூர ஒருபோதும் இடமளிக்க முடியாது.
வரும் 18 ஆம் நாள், வடக்கில் புலிகளை நினைவுகூரும் வகையிலோ அல்லது புலிக்கொடி ஏந்தியோ, புலிகளின் தலைவர்களை நினைவுகூரும் வகையிலோ ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும் போரில் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவுகூர முடியும். அதற்கு அரசாங்கம் தடையாக செயற்படாது.
அதேவேளை புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில், இராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வுப்பிரிவு என்பன செயற்பட்டு வருகின்றன.
வடக்கில் போரில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவுகூர நினைவுத்தூபி அமைக்க முடியும். ஆனால் புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது. அதற்கு அரசாங்கம் எந்த அனுமதியையும் வழங்காது” என்றும் அவர் தெரிவித்தார்.