கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் அரசின் உள்வீட்டு வேலை – சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து, கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்றும், ராஜபக்ச குடும்பம் அனுதாப உணர்வை வெற்றி கொள்வதற்காகவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்.
”2006 டிசெம்பரில் கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீதே குற்றம்சுமத்தப்பட்டது.
எந்த தீவிரவாதியும், தனது இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில், குண்டை வெடிக்க வைக்கமாட்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுத் தாக்குதலில், கோத்தாபய ராஜபக்ச காயமின்றி உயிர்தப்பினார். ஆனால், அவரது இராணுவ அணியில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து உடனடியாக, விடுதலைப் புலிகளுடனான எல்லாத் தொடர்புகளையும் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம், நோர்வே சமாதான ஏற்பாட்டாளருக்கு அறிவித்தது.
அமைதி முயற்சிகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விலகிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.