கோத்தா சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்காவுக்கு ஓட்டம் – விசாரணை ஆணைக்குழு சீற்றம்
பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் திடீரென அமெரிக்காவுக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபாக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் ஆணைக்குழு கோரவுள்ளது.
பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தாமல் திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.
இதனால் தமது விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி, ஆணைக்குழுவின் செயலாளர் ஊடாக சிறிலங்கா அதிபரிடம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாத முதல் வாரத்திலேயே கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என்ற அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.