மாலைதீவு தொடக்கம் மலாக்கா வரை ஆழ்கடல் ரோந்தில் இறங்குகிறது சிறிலங்கா கடற்படை
மாலைதீவு தொடக்கம் மலாக்கா நீரிணை வரையான ஆழ்கடலில் சிறிலங்கா கடற்படை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஒன்றை அடிப்படையாக வைத்தே, சிறிலங்கா கடற்படை இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதுகாப்புத் திட்டம் 2020ஆம் ஆண்டு வரை இடம்பெறும்.
சிறிலங்கா கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், மாலைதீவு மற்றும் இந்தோனேசியாவில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்றும் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள் தேவைப்படுகின்றன என்றும், விரைவில் நான்கு கப்பல்களை இதற்காக கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.