அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – மறுப்பதற்கு அவசரப்படாத சிறிலங்கா இராணுவம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையில், கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள்-2015 அறிக்கையில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
எனினும், சிறிலங்காவில் கடந்த ஆண்டும் சிறிலங்கா படைகளினால், சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக அந்த அறி்ககையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீரவிடம் கேள்வி எழுப்பிய போது, அமெரிக்காவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், வரும் 18ஆம் நாள் அதுபற்றி பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிக்கையை ஆராய்ந்த பின்னர் பாதுகாப்புச் செயலருடன் கலந்துரையாடி விட்டு பதிலை வழங்குவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.