வடக்கு மாகாணசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ஜாதிக ஹெல உறுமய
அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க,
”மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவை செய்ததன் மூலம் வடக்கு மாகாணசபை பிரிவினைப் பாதையில் செல்கிறது.
இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடக்கு மாகாணசபையின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர், பிரதமர், ஆளுனர் ஆகியோர் கவனத்தில் எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழ் பேசும் சமூகத்துக்கான தனி மாநிலத்தை உருவாக்க முனைகிறார்கள். வெவ்வேறு இனக் குழுக்களுக்கிடையில், இது மோதலை ஏற்படுத்தும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.