வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வு பிரேரணை ஒத்திவைப்பு
அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, வரும் 18ஆம் நாளுக்கு வடக்கு மாகாணசபை ஒத்திவைத்துள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாணசபை நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை, கடந்த 7ஆம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சரால் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாகவும், ஏனைய ஏழு மாகாணங்களை இணைத்து இன்னொரு மாநிலமாகவும், அமைக்கப்பட வேண்டும் என்று அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த யோசனை தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு, தீர்வு யோசனை பிரேரணை நேற்று வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்றைய மாகாணசபை அமர்வில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை.
பிரேணையின் வரைவு இன்னமும் முழுமையாக்கப்படவில்லை என்றும், வரும் ஏப்ரல் 22ஆம் நாள் இந்தப் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நேற்று அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்படும் இந்தப் பிரேணை, வரும் 30ஆம் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம், யாழ்ப்பாணத்தில் வைத்து கையளிக்கப்படும்.