சிறிலங்காவில் அமெரிக்க டொலருக்கு சமமான மதிப்பைப் பெறுகிறது சீனாவின் யுவான்
சிறிலங்காவில், அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்பு சீனாவின் யுவான் நாணயத்துக்குக் கிடைக்கவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமருடன் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர், அர்ஜூன மகேந்திரன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
சீன அபிவிருத்தி வங்கி விரைவில் தனது செயற்பாடுகளை கொழும்பில் ஆரம்பித்ததும், சிறிலங்காவில் யுவான் இலகுவில் மாற்றக் கூடிய நாணயமாக மாறும்.
அமெரிக்க டொலருக்கு சிறிலங்காவில் காணப்படும் மதிப்பைப் போன்று சமமான மதிப்பு, சீனாவின் யுவானுக்கு வழங்குவதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தெளிவான காலஎல்லை எதனையும் இன்னும் குறிப்பிடவில்லை. இந்தத் தீர்மானம் பல்வேறு மட்டங்களில் மிகவும் முக்கியமானது.
பொருளாதார ரீதியில் சீனா தனது செயற்பாட்டைஎமது நாட்டில் ஒருங்கிணைக்க அனுமதிப்பதானது, சீனாவுடன் சிறிலங்கா மேலான உறவுகளை விரிவாக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
குறிப்பாக மென்கடன்கள், நீண்டகால மற்றும் குறுகியகால நிதி உதவிகளுக்கும் இது சந்தர்ப்பமாக அமையும்.
உலகப் பொருளாதாரத்தில் சக்திவாய்ந்த நாடாக சீனா முன்னேறிவரும் நிலையில் தற்பொழுது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் மிகவும் முக்கியம்வாய்ந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.