அடுத்த ஆண்டு சிறிலங்கா வரும் சீனப் பிரதமர் சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவார்
அடுத்த ஆண்டு சீனப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர், இன்று மதியம் அலரி மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு இந்த ஆண்டுக்குள் இறுதி செய்யப்படும்.
அடுத்த ஆண்டு சீனப் பிரதமர் லி கெகியாங் சிறிலங்கா வரும் போது, இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும். சீனப் பிரதமரின் வருகைக்கு முன்பாக உடன்பாடு இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமர் கடந்த வியாழக்கிழமை பீஜிங்கில் சீனப் பிரதமரைச் சந்தித்த போது, சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்த சீனப்பிரதமர் அடுத்த ஆண்டு கொழும்பு வருவதாக உறுதியளித்துள்ளார்.எனினும், பயணநாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இருநாடுகளுக்கும் பொருத்தமான காலப்பகுதியில் இந்தப் பயணம் இடம்பெறும் என்று நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.