மேலும்

துறைமுக நகரத் திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது- சிறிலங்கா பிரதமர்

ranil-chinaகொழும்புத் துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவினதோ அல்லது அயல்நாடுகளினதோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனப் பயணத்தின் முடிவில், இன்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் சீனாவுக்கு மாத்திரமானதல்ல. அது தென்னாசியாவின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ளது.

இந்தத் திட்டத்தில் அனைத்து நாடுகளும் முதலிட முடியும். இதில் முதலீடு செய்ய அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

எமது பொருளாதாரத் திட்டத்தை நாங்கள் மாற்றவில்லை. துறைமுக நகரத் திட்டத்தில் பின்பற்றப்படாத சில விடயங்களைத் திருத்தியமைத்துள்ளோம்.

துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிலப்பரப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கே சொந்தமாகும். அதனை 99 ஆண்டுகளுக்கு- நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கிறோம்.

இது ஒரு முதலீட்டுத் திட்ட கட்டுமானம். இந்தத் திட்டத்தில் முதலிட விரும்புபவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதலிட முடியும்.

துறைமுக நகரத் திட்டத்தினால் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கோ  அச்சுறுத்தல் ஏற்படாது.

தெற்காசியாவின் பொருளாதார மத்திய நிலையம் என்ற நிலையை சிறிலங்கா பெறுவதற்கான அடித்தளமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

அண்டை நாடுகளுடனும் அனைத்துலகத்துடனும் பாதுகாப்புத் தொடர்பாகக் கலந்தாலோசித்த பின்னர்தான் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்க முடிவெடுத்தோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *