பிரகீத் கடத்தல் வழக்கு- கையொப்பத்தை மாற்றி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தப்பிக்க முயற்சி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தமது கையொப்பங்களை மாற்றியிருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமகம நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னிலையான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் அபேசேகர இதுபற்றி நீதிவானிடம் தெரியப்படுத்தினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது சந்தேக நபரின் கையொப்பத்தை தாம் ஆராய்ந்த பின்னர், சந்தேக நபர்கள் தமது கையொப்பத்தையும் கூட மாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“சந்தேக நபரின் கையொப்பம், சில ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ஆவணங்களில் அவர் ஒப்பமிட்டுள்ளது போன்று இல்லை.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பிரகீத் எக்னெலிகொட அக்கரைப்பற்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இராணுவ முகாமிலுள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுள்ளனர்.
அந்த இராணுவ எரிபொருள் நிலையத்தின் ஆவணங்களில் சந்தேகநபரின் கையொப்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, கற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களை ஏப்ரல் 19ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.