கடற்புலிகளின் கண்ணிவெடியை ஆய்வு செய்த அமெரிக்க கடற்படைத் தளபதி
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைத் தளபதியான வைஸ்அட்மிரல் ஜோசப் ஓகொயின் இன்று கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்று கொழும்புத் துறைமுகம் வந்த யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் போர்க்கப்பலில் வந்த வைஸ்அட்மிரல் ஜோசப் ஓகொயின் இன்று திருகோணமலையில் உள்ள கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதன்போது சிறிலங்கா படை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தியதுடன், கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் தயாரித்து பயன்படுத்தப்பட்ட தாக்குதல் படகுகள், கடற்கண்ணிவெடிகள், மற்றும் ஆயுதங்களையும் பார்வையிட்டார்.
சிறிலங்கா கடற்படையின் அதிவேக ரோந்துப் படகில் திருகோணமலைத் துறைமுகத்தின் அமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் வைஸ்அட்மிரல் ஜோசப் ஓகொயின் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அத்துடன், சிறிலங்கா கடற்படையின் சிறப்புப்படகுப் படையணியின் பயிற்சியாளர்களுடனும் அவர், கடற்போர்முறை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.