கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா விமானப்படை சிறப்பு பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய விசேட திட்டம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இன்று ஆரம்பித்துள்ளது.
விமானப்படையின் அணியொன்று இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை இன்று பார்வையிட்ட சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள இதுதொடர்பான உத்தரவை வழங்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய முனையங்களில் விமானப்படையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்வரும்,வெளிச்செல்லும் பயணிகளும் விமானப்படையினரால் கண்காணிக்கப்படவுள்ளனர் என்ற சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இங்கு 24 மணிநேரமும் சிறிலங்கா விமானப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் சிறிலங்காவை ஒரு நுழைவு வழியாகப் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே சிறிலங்கா விமானப்படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
35 தொடக்கம் 40 வரையான தமது நாட்டவர்கள் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளில் இணைந்துள்ளதாக, மாலைதீவு அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
மாலைதீவு நாட்டவர்கள் வெளிநாடு செல்வதற்கு சிறிலங்காவையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.