யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்
யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”யாழ்ப்பாண மாவட்டத்தில் பல காணித்துண்டுகள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படமாட்டாது. அந்தக் காணிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியமானவை என்று கருதப்படுகின்றன.
யாழ். மாவட்டத்தில் 5700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ள காணிகளுக்கு அதிகளவு இழப்பீடு வழங்கப்படும். இதுதொடர்பாக மாகாணசபை மற்றும் மாவட்டச் செயலாளருடன் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.
இராணுவத் தேவைக்கு எவ்வளவு நிலம் தேவை என்றும் நாம் இப்போது கணிப்பிட்டு வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் இன்னும் 3 மாதங்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சில நாட்களுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.