புதிய காவல்துறைமா அதிபராகிறார் மகிந்தவின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி?
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், எஸ்.எம்.விக்கிரமதுங்க, சிறிலங்காவின் அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்த என்.கே.இலங்ககோன் ஏப்ரல் 12ஆம் நாளுடன், 60 வயதை எட்டவுள்ளதால், அன்றுடன் ஓய்வு பெறவுள்ளார். அதற்கு முன்னதாக அவர், நேற்றில் இருந்து விடுமுறையில் சென்றுள்ளார்.
இந்தநிலையில் பதில் காவல்துறை மா அதிபராக மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், எஸ்.எம்.விக்கிரமதுங்க, நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரே அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இவர் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதுடன், சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அடுத்த காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பூஜித ஜெயசுதந்தரவும், எஸ்.எம்.விக்கிரமசிங்கவும், உதவிக் காவல்துறை கண்காணிப்பாளராக ஒரே நாளில் காவல்துறையில் இணைந்து கொண்டவர்கள். அத்துடன், கண்காணிப்பாளர், மூத்த கண்ணகாணிப்பாளர், பி்ரதி காவல்துறைமா அதிபர் பதவிகளையும் ஒரே நாளிலேயே பெற்றவர்கள்.
குருநாகலவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பதில் காவல்துறை மா அதிபராகவும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.