நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைகிறது – கோத்தா குற்றச்சாட்டு
நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தாம் நிறுத்திய இராணுவப் படைப்பிரிவுகளை, அங்கிருந்து விலக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியினர், ஜப்பானில் உள்ள தமது ஆதரவாளர்களின் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில், இணையவழி காணொளித் தொழில்நுட்பம் மூலம், உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச,
“போதிய திறன் இன்மையால் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை.
தாமே போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாகவும், அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அவர்களால் நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னேற்ற முடியவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் நாம் நிறுத்திய இராணுவப் படைப்பிரிவுகளை திருப்பி அழைப்பதற்கு அவர்கள் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜகபக்சவே, ஆயுதப்படைகளின் தளபதி என்ற வகையிலும், நாட்டின் அதிபர் என்ற வகையிலும், சமூக, அரசியல், தலைமைத்துவம் மூலமும், அனைத்துலக ஆதரவுடனும், போரில் வெற்றியை ஈட்டினார்.
நாட்டைப் பாதுகாக்க உதவிகளை வழங்க நான் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.