லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சந்திரா வகீஸ்டாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு, அவருக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்தமை, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியமை மற்றும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான கந்தேகெதர பியவன்ச என்ற படைச் சிப்பாயை விடுவித்தமை போன்றன குறித்து தற்போது காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன அல்விஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.