சிறிலங்காவின் வரலாற்று எதிரி இந்தியா – உதய கம்மன்பில
சிறிலங்காவின் வரலாற்று எதிரி நாடான இந்தியாவுடன், எட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் ஒரு மாநிலமாகவே சிறிலங்கா மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.
“கூட்டு உடன்பாடுகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சிறிலங்காவை இந்தியாவுக்குத் தாரைவார்க்கும் உடன்பாட்டையே நாம் எதிர்க்கிறோம்.
இந்தியாவின் நோயாளர் காவுவண்டிசேவையைப் பெற்றுக் கொள்வதால் “ரோ” உளவுப் பிரிவினர் தடையின்றி நாடு முழுவதும் நடமாடும் ஆபத்தான நிலைமை ஏற்படும்.
ஏற்கனவே, சிக்கிம் என்ற பிரதேசத்தை, இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டு அதற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதும், அனுமான் பாலம் அமைப்பதுமே, இந்தியத் தூதுவரின் திட்டம்.
இதன் மூலம் சிறிலங்கா எதிர்காலத்தில் இந்தியாவின் மாநிலமாகவோ, அல்லது இந்தியாவின் காலனித்துவ நாடாகவோ மாறிவிடும் ஆபத்து உள்ளது.
வரலாற்று ரீதியாக சிறிலங்காவின் எதிரி இந்தியா. எனவே தான் ஜே.வி.பி.யின் தலைவர் ரோகன விஜேவீர இந்தியாவின் ஆதிக்க விரிவாக்கலுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இந்தியாவுடன் உடன்பாட்டை செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறுவில்லை. மாறாக இந்தியாவின் காலனி்த்துவ நாடாக சிறிலங்காவை மாற்ற வேண்டாம். எமது வளங்களை தாரை வார்க்க வேண்டாம் என்றே கூறுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.