மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளத்திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்
நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீள இயக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்பிலிப்பிட்டிய, புத்தளம், மாத்தறை, ஹொரண உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், 300 டீசல் மின்உற்பத்தி நிலையங்கள் செயற்பட்டு வந்தன. இவை கடந்த ஆண்டு மூடப்பட்டன.
தொடரும் வரண்ட காலநிலையால், நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதையடுத்து, டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளவும் செயற்பட வைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, மின்சக்தி அமைச்சின் செயலர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியதும், செலவுமிக்க இந்த டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன.
இப்போது மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இவற்றை மீள இயக்குவது பற்றிச் சிந்திக்கிறோம். தனியார் நிறுவனங்களிடம் உள்ள டீசல் மின்உற்பத்தி நிலையங்கள் தான் எமது தெரிவாக உள்ளது.
டீசல் மின் உற்பத்தியை ஆரம்பிக்குமாறு தனியார் நிறுவனங்களிடம் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.