தன்மீதான தாக்குதலுக்கு உதவிய புலி உறுப்பினரை விடுவிக்கக் கோருகிறார் சரத் பொன்சேகா
தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியவர் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி்களின் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை நடத்திய மகிந்த ராஜபக்ச காலத்து இரகசியங்களை அம்பலப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பிலேயே, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
”தன்னைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தார்.
அதுபோலவே இராணுவத் தலைமையக குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொறிஸ் என்ற விடுதலைப் புலி உறுப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும்.
நான் சிறைச்சாலையில் இருந்த போது அவரை சந்தித்துள்ளேன். அவரை விடுவிப்பது நல்லிணக்கத்துக்கான ஒரு சமிக்ஞையாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குள் 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா படுகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.