பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்திய அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆராய்கிறது
பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை வி்ரிவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மையில் கொழும்பில் நடந்த இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக இந்திய விமானப்படை அதிகாரிகளி்ன் குழுவொன்று விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஐந்து பேர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவொன்று நேற்றுமுன்தினம் கொழும்பு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் நேற்று பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்தில் நடந்த சந்திப்பு ஒன்றில் பங்கேற்றதுடன், சிறிலங்கா அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.
இன்று இந்தக் குழுவினர் பலாலி விமான நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அதிகாரிகள் குழுவொன்று இன்று பலாலி விமான நிலையத்தை ஆய்வு செய்யவுள்ளதாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் குழுவினர் பலாலி விமான நிலையத்தை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு தரமுயர்த்தலாம் என்பது பற்றிக் கவனம் செலுத்துவார்கள் என்று தெரியவருகிறது.
எனினும், தற்போது வந்துள்ள இந்தியக் குழுவினர் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து துறையை சார்ந்தவர்களா அல்லது இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
தென்னிந்திய நகரங்களுக்கு பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில், பலாலியை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரைப் பணயம் வைத்து இந்தியா ஆக்கிரமிப்பு அரசியல் இலாபம் தேடுகிறது. தமிழருக்கு வான் வழிப் பயணம் வயிற்றப் பசியைப்போக்குமா? கடலில் மின் பிடிக்க என்ன வழி ? இழந்த மண்ணில் குடியேறிப் பயிர் செய்ய இந்தியா உதவமா? தமிழனை அடக்கி அடிமை செய்ய இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.