வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்றார் ரெஜினோல்ட் குரே
வடக்கு மாகாண ஆளுனராக, ரெஜினோல்ட் குரே இன்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மதியம் அவர் பதவியைப் பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த, எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார தாம் ஓய்வில் செல்ல விரும்புவதாக சிறிலங்கா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, புதிய ஆளுனராக, ரெஜினோல்ட் குரேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த, ரெஜினோல்ட் குரே பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.