படையினரைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவோம் – ருவான் விஜேவர்த்தன
சிறிலங்கா படையினரை பாதுகாப்பதாக சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.
“எமது ஆயுதப்படையினரை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உதவுவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், கூட்டு எதிர்க்கட்சியினரும், கூறுவது முற்றிலும் பொய்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனும், அத்தகைய எந்த நகர்வும் இருக்காது என்றும், நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு முற்றிலும் சிறிலங்காவுக்கே இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சிறிலங்கா படையினரைப் பாதுகாப்பதாகவும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது என்றும் சிறிலங்கா அதிபரும் பிரதமரும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
நாம் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். படையினரை சிறையில் அடைத்து பிரச்சினையை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
தேசிய பாதுகாப்பையும் நாட்டின் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதுவதே அரசாங்கத்தின் தேவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.