மங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவில் தாம் அனைத்து சமூகத்தினருடனும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.
இன்று காலை சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரை கட்டுநாயக்க விமான நிலையத்தில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.
அதையடுத்து. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், செயிட் ராட் அல் ஹுசேனுக்கும், மங்கள சமரவீரவுக்கும் பேச்சுக்கள் இடம்பெற்றன.
அதையடுத்து வௌியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர், தாம் தற்போது தான் சிறிலங்கா வந்துள்ளதாகவும், அரசாங்கத் தரப்பு மற்றும் அனைத்து சமூகத்தினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரும் நாட்களில் தாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.