சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – கட்டுநாயக்கவில் மங்களவை சந்திப்பு
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பீஜிங் திரும்பும் வழியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர், வாங் யி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
குறுகிய நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சீன வெளிவிவகார அமைச்சரின் விமானம் தரித்து நின்ற போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், அவரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.
சீன வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுக்கள் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு சிறிலங்கா பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கு முன்னர், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் சிறிலங்காவின் தங்கியுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பரபரப்படைந்துள்ள சூழலில், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் குறுகிய நேர சிறிலங்கா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.